Last Updated:
கடம்பூர் மலைப்பகுதியில் இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடம்பூர் மலைப்பகுதியில் இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட இளைஞர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு .
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியின் உச்சியில் அமைந்துள்ளது கம்பத்தராயன் கிரி திருக்கோயில். இக்கோவிலில் வருடா வருடம் புரட்டாசி மாதத்தில் நிகழும் நான்கு சனிக்கிழமைகளிலும் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பசுவனாபுரம் பகுதியைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கம்பத்தராயன் கிரி மலையில் உள்ள கோவிலுக்கு சென்று போதைப்பொருட்கள் உபயோகித்துக் கொண்டு கோவிலில் உள்ள வேல் கம்புகளை எடுத்து சேதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சமூக வலை தளங்களில் வெளியானதை அடுத்து, ஆத்திரமடைந்த கடம்பூர் பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர், இந்து கோவிலை அவமதிக்கும்படி நடந்து கொண்ட இளைஞர்களை கைது செய்யக்கோரி, சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இருப்பினும் அவர்கள் மீது வழக்கு செய்யாமல் மெத்தனம் காட்டிய காவல்துறையை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் காவல்துறையினர் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கடம்பூர் பேருந்து நிலையம் அருகே கூடிய இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் போராட்டம் நடத்துபவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இன்னும் 24 மணி நேரத்தில் கைது செய்கின்றோம். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம் என உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் கடம்பூர் சத்தியமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இது தொடர்பாக முதற்கட்டமாக 4 பேர் கைது செய்ப்பட்ட நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டு கோபிச்செட்டிப்பாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர்: தினேஷ்( ஈரோடு)
