Last Updated:
ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நூற்றுக்கணக்கானோர் விடிய விடிய தடுப்பூசி மையத்தில் காத்திருந்தனர்.
கொரோனா 2-வது அலையில் தமிழ்நாட்டில் அதிகளவில் மக்கள் பதிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்கும் விதமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசி மையங்களில் அதிகளவில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோட்டில் வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த உள்ளூர் மக்கள் தடுப்பூசி போடுவதற்காக நேற்றிரவே பள்ளிக்கு படையெடுத்தனர். பள்ளி நுழைவு வாயிலில் 100 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும், 300 க்கும் மேற்பட்டோர் இரவு 8 மணி முதலே வரிசையில் காத்திருக்க தொடங்கினர். பெருபாலானோர் தங்களது பெயரில் தரையில் வட்டமிட்டு அதனுள் கற்களை வைத்துவிட்டு சென்றனர்.
இந்த காத்திருப்பு வரிசையில் சிலர் இடையில் புகுந்ததால் பொதுமக்களிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் விதமாக தடுப்பூசியை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். விடியற்காலை 5.30 மணிக்கு 100 பேருக்கு மட்டும் டோக்கன் தரப்பட்டது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
