ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் அறக்கட்டளை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


Last Updated:

கொரோனோவினால் தனிமைப்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மதிய உணவை இலவசமாக வழங்கி வருகின்றனர் ஈரோட்டைச் சேர்ந்த அறக்கட்டளையினர்.

கொரோனா இரண்டாவது அலையின் வீச்சும், வேகமும் முதல் அலையை காட்டிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல், அன்றாட சமையலுக்கு தேவையான பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வரும் சூழல் உருவாகியுள்ளது. அத்தகைய நோயாளிகளின் துயர் துடைப்பதற்காக, ஈரோடு சத்யசாயி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று மதிய உணவை நேரடியாக வழங்கி சேவையாற்றி வருகின்றனர்.

சத்யசாயி அமுதம் திட்டத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கீரை வகைகள், பருப்பு வகைகள், பொறியல், மிளகு ரசம், கொள்ளு ரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆரோக்கியமான உணவுகளை வழங்கி வருகின்றனர். ஈரோடு, சித்தோடு, சத்தியமங்கலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்களது சேவை விரிவடைந்துள்ளது.

உணவு தேவைப்படவோர் ஒரு நாள் முன்னதாகவே சொல்லி தங்களிடம் உணவை பெற்றுக்கொள்ளலாம் என கூறும் சத்யசாயி அறக்கட்டளையினர், தினமும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தன்னார்வலர்கள் மூலம் மதிய உணவு வழங்கி வருவதாக கூறுகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, தேவைப்படும் நாட்கள் வரை மதிய உணவு வழங்கப்படும் என்றும் சத்ய சாயி அறக்கட்டளையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்; பாபு, ஈரோடு

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *