Last Updated:
நண்பன் அனுப்பிய வீடியோ தொடர்பாக ஈரோடு டிஎஸ்பி-க்கு சென்னையை சேர்ந்த இளைஞர் போன் செய்ததால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது.
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஈரோடு டிஎஸ்பி-க்கு நள்ளிரவில் போன் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வேளச்சேரி சேர்ந்த லோகேஷ் என்பவர் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமாருக்கு நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போதும் “எனது நண்பர் அஜித் குமார் என்பவர் ஈரோட்டில் வசித்து வருகிறார். அவர் காதல் பிரச்னை காரணமாக விஷ மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற வீடியோவை எனது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி உள்ளார். எனது நண்பர் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று தோன்றுகிறது. தயவு செய்து எனது நண்பர் உயிரை காப்பாற்றுங்கள் என்று கூறி அஜித்குமார் தொலைபேசி எண்ணை அனுப்பினார்.
இதனையடுத்து டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் அஜித்குமார் தொலைபேசி எண்ணிற்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனையடுத்து ஆனந்தகுமார் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து போன் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன் நம்பர் ஆப்பக்கூடல் புன்னம் கிராமத்தை காண்பித்தது. உடனடியாக ஆப்பக்கூடல் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் இடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் போன் சிக்னலை வைத்து அஜித் குமார் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரது வீட்டின் முன்பு அவரது பெற்றோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்களை எழுப்பி நடந்த விஷயத்தை போலீசார் கூறினர். பின்னர் போலீசாரும் அவரது பெற்றோரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அஜித்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அஜித் குமார் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் துரிதமாக செயல்பட்டதால் வாலிபர் உயிர் காப்பாற்றப்பட்டது.
செய்தியாளர் : பாபு (ஈரோடு)