Last Updated:
மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடியிருப்பது தெரிய வந்தது.
கோபிச்செட்டிப்பாளையத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருமாள் கோயில் புதூரை சேர்ந்தவர் மனோகரன் விவசாயி். இவரது மனைவி வசந்தாமணி இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகனும் ராதா, லலிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.செந்தில்குமார் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
வசந்தாமணி தனது ஆடு மற்றும் மாட்டை அந்த பகுதியில் உள்ள கீழ் பவானி வாய்க்கால் அருகே விவசாய நிலங்களில் நாள்தோறும் மேய்ச்சலுக்காக ஓட்டி செல்வது வழக்கம். மாலை வசந்தாமணி வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கீழ்பவானி வாய்க்கால் அருகே விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு இருந்துள்ளார். வழக்கமாக மாலை 6 மணிக்குள் கால்நடைகளுடன் வீடு திரும்பும் வசந்தாமணி இரவாகியும் வீடு திரும்பவில்லை.
வசந்தாமணியின் கணவர் மனோகரன், மகன் செந்தில்குமார் ஆகியோர் வழக்கமாக மேய்ச்சலுக்காக கால்நடைகளை ஓட்டிச்செல்லும் இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் வசந்தாமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரனும், செந்தில்குமாரும் வசந்தாமணியின் அருகே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடியிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கோபி டி.எஸ்.பி ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த வசந்தாமணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் வசந்தாமணியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கல்லையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.முன் விரோதம் காரணமாக வசந்தாமணி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Aug 02, 2021 11:04 AM IST
